செவ்வாய், 13 நவம்பர், 2012

<> கொள்ளு சூப் <>



கொள்ளு சூப்


                          
தேவையான பொருள்கள்:-
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

மருத்துவ குணம்: -
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.


கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொள்ளு ரச‌ம்,கொள்ளு துவைய‌ல்,கொள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.



இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.


சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி

சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்

உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்

பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்

கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும். 



<>முடக்கத்தான் கீரை சூப் <>



முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை
முடக்கத்தான் கீரை 
தேவையான உப்பு
தேவையான மிளகுத்தூள்
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.



குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்

தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

<>முள்முருங்கை தோசை / முள்முருங்கை அடை<>


முள்முருங்கை தோசை

முள் முருங்கை கீரை-சிறிதளவு
பச்சரிசி மாவு-1 கப் அல்லது ஒரு உழக்கு அளவு
உளுந்து மாவு- கால் கப் கால் உழக்கு அளவு
உப்பு-தேவயான அளவு
மிளகுத்தூள்-1 டீஸ்பூன்

செய்முறை:

முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும். சிறுகச் சிறுக தண்ணீர் விட்டு தோசைப் பதத்திற்கு கரைத்துகொண்டு ஒரு அளவு கரண்டி மாவு எடுத்துத்
தோசையை வார்க்க வேண்டும்.  இதை ஆலிவ் எண்ணெய் விட்டு புரட்டிப் போட்டு முறுகலாகச் சுட்டுப் போட்டால் இன்னும் ரெண்டு குடுங்க‌
என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

முள் முருங்கை


இதையே அடையாகச் சுடலாம்.
முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு சிறு துண்டு இஞ்சியை மிகவும் சன்னம்சன்னமாக வெட்டி அதையும் சேர்த்து பிசைஞ்சு சின்னச் சின்ன உருண்டைகளாக 
எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைசுக்குத் தட்டி,  தோசைக் கல்லுலப் போட்டு 
மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.

இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

முள்முருங்கையின் மருத்துவக் குணங்கள்:

முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.

கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.







<>தானிய அடை<>


தானி அடை

தேவையான பொருட்கள்
கோதுமை - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
கம்பு - 1 கப்
சோளம் - 1 கப்
மிளகாய் வற்றல் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 1
வெங்காயம் - 2
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் முதலியவற்றை 4 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய், பூண்டு, சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயம் முதலியவற்றின் தோலை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் கேரட், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.

<>சோள தோசை<>


சோள தோசை
தேவையான பொருட்கள்
வெள்ளை சோளம் - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
தனியா (மல்லி விதை) - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
சிவப்புத் தக்காளி 4
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை

சோளம், உளுந்தம் பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் சோளம், உளுந்தம் பருப்பு, தனியா, சீரகம் போட்டு அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அரைத்து தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 

கொஞ்சம் ருசி,புளிப்பு தேவை என்று கருதினால் பழுத்த சிவப்புத் தக்காளி 4 சேர்த்து கடைசியாக அரைத்துக்
கொண்டால் சூப்பர் தோசை. கலர்ஃபுல் தோசையாகவும் ருசியாகவும் இருக்கும்.

திங்கள், 12 நவம்பர், 2012

<>ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை...<>


ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. 

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. 

புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. 

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது. 

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.
ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. 

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. 

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். 

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

<>முட்டைக்கோஸ் சூப் <>


முட்டைக்கோஸ் சூப் 

தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 250 கிராம்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
தண்ணீர் - 1 லிட்டர்
பால் - 100 மி.லி
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ற அளவு
செய்முறை
முட்டைக்கோஸை நறுக்கிக் கொள்ளவும். கேரட்டின் தோலை சீவி, அதனையும் நறுக்கிக் கொள்ளவும். இக்காய்கறிகளை வெண்ணெயில் வதக்கி தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் தேவையான உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு அதில் பால், கொத்தமல்லி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


முட்டைக்கோஸ் சூப் – எடை குறைக்க உதவும் திட்ட, பத்திய உணவு...உபயோகமான தகவல்கள்
யார் முதலில் முட்டைக்கோஸ் சூஃப் உணவைத் துவங்கி வைத்தார்கள் என்பது தெரியவில்லை. இது குறைந்த அளவு கலோரிகள் கொண்ட கொண்ட உணவு. 7 நாட்களுக்கு மட்டுமே இந்த உணவுப் பட்டியிலின் படிச் சாப்பிட வேண்டும். இந்த 7 நாட்களில் தேவையான அளவு முட்டைக்கோஸ் சூஃப்பைத் தினமும் குடிக்கலாம், பழங்கள், காய்கறிகள், மற்ற உணவுகளையும் சாப்பிடலாம்.

7 நாட்களுக்கான உணவு விவரங்கள்:-

• நாள் 1 – உங்கள் விருப்பம் போல் எவ்வளவு சூஃப் வேண்டுமானாலும், எத்தனை தடவையும் சாப்பிடலாம். வாழைப்பழத்தைத் தவிர மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

• நாள் 2 – முட்டைக்கோஸ் சூஃப், புதிய, பசுமையான சமைக்காத அல்லது சமைத்த காய்கறிகள். காய்ந்த பீன்ஸ், பட்டாணி, கிழங்குகள் (உருளைக்கிழங்கைத் தவிர) மற்றும் மக்காச் சோளத்தையும் சாப்பிடாதீர்கள். ஒன்று அல்லது இரண்டு அவித்த உருளைக்கிழங்குகளையும் சாப்பிடலாம்.

• நாள் 3 – வேண்டிய அளவு முட்டைக்கோஸ் சூஃப், பழங்களும் காய்கறிகளும் நாள் 1, நாள் 2 போல். ஆனால் உருழைக்கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது.

• நாள் 4 – தேவையான அளவு முட்டைக்கோஸ் சூஃப், 6 முதல் 8 வாழைப்பழங்கள் மற்றும் கொழுப்பில்லாத பால்.

• நாள் 5 – 300 முதல் 500 கி கொழுப்பில்லாத இறைச்சி (சைவ உணவு சாப்பிடுபவர்களுக்குப் பருப்பு வகைகள்) மற்றும் 6 தக்காளிகள் வரை. இன்று ஒரு தடவையாவது முட்டைக்கோஸ் சூஃப் சாப்பிடுங்கள். இறைச்சி சாப்பிட விருப்பம் இல்லாவிட்டால் அவித்த மீன் அல்லது தோல் இல்லாத கோழிக்கறி சாப்பிடலாம். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிங்கள்.

• நாள் 6 – கொழுப்பில்லாத இறைச்சி அல்லது பருப்புக்கள் மற்றும் காய்கறிகளை இன்று சாப்பிடலாம். ஃஸ்டீக்ஸ், 2 அல்லது 3 துண்டுகள் மற்றும் புதிய, பசுமையான காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சலாட். ஒரு தடவையாது முட்டைக்கோஸ் சூஃப் சாப்பிடுங்கள். உருழைக்கிழங்கு, மற்ற கிழங்குகளை இன்று சாப்பிடக்கூடாது.

• நாள் 7 – சோறு, புதிய, பசுமையான காய்கறிகள் மற்றும் சீனி சேர்க்கப்படாத பழச்சாறுகள் இன்று சிபாரிசு செய்யப்படுகின்றன. ஒரு தடைவையாது முட்டைக்கோஸ் சூஃப் சாப்பிடுங்கள்.

இந்த 7 நாட்களிலும் பால், சீனி சேர்க்கப்படாத தேநீர், காப்பி, குருதி நெல்லிச் சாறு மற்றும் தண்ணீரையும் குடிக்கலாம்.

மதுபானங்கள் மற்றும் எல்லா மென்பானங்களையும் குடிக்ககூடாது. சோடாவையும் தவிர்க்கவேண்டும்.

உங்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி முட்டைக்கோஸ் சூஃப்பைத் தயாரிங்கள். முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகு, சிவரிக்கீரை (செலரி) மற்றும் கொஞ்சம் வெங்காய சூஃப் கலவையையும் சேர்த்துக்கொள்ளலாம். கறிப்பொடி, மிளகாய், மிளகு மற்ற மசாலாப்பொருட்களையும் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். உப்பு அதிகம் சேர்க்காதீர்கள்.

முட்டைக்கோஸ் சூஃப்பின் ருசி சிலருக்குப் பிடிக்காது. வாயுத்தொல்லைகள் உண்டாகலாம். இந்த உணவில் தேவையான புரதம், கொழுப்பு, மற்ற பொருட்களும் குறைவாக இருக்கச் சந்தர்ப்பம் உண்டு.

முட்டைக்கோஸ் சூஃப் உணவு மிக விரைவில் எடையைக் குறைக்க நல்லது. தொடர்ந்து இதைச் சாப்பிடக்கூடாது. 7 நாட்களுக்குப் பிறகு உங்கள் உடம்பிற்குத் தகுந்த, தொடர்ந்து சாப்பிடக்கூடிய உணவும், தேவையான உடற்பயிற்சிகளும் சிபாரிசு செய்யப் படவேண்டும்.

முட்டைக்கோஸ் சூஃப் உணவைக் கடைப்பிடிக்க நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும் மன பலம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். தலைச்சுற்றல் வந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். இதனால் எடை குறைவதால், தொடர்ந்து மற்ற உணவுகளைக் கொண்டு இன்னும் குறைக்க ஆர்வம் உண்டாகும்.

இந்த முறையால் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் நீங்கள் விரும்பும் எடையையும் எப்பொழுதும் வைத்திருக்க முடியும்.

<>இயற்கை உணவே இனிய உணவு<>

இயற்கை உணவே இனிய உணவு


இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.

இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், "ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.

இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு.

இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். 

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும். 

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். 

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். 

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள்.

இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. 

ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.

இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார்.

உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான்.

<>கேழ்வரகு இட்லி <>


கேழ்வரகு இட்லி 

தேவையானவை...... 

கேழ்வரகு மாவு -  100 கிராம் 
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி 
உளுந்து – 25 கிராம் 
வெந்தயம் – கால் தேக்கரண்டி 
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை 
உப்பு – தேவைக்கு 

செய்முறை..... 

• ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். 

• உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும். 

• அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். 

• புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும். 

• டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.

<>வெந்தயக்கீரை சப்பாத்தி<>


வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவையான பொருட்கள்....

வெந்தயக்கீரை- ஒரு கட்டு 
கோதுமை மாவு- 2 டம்ளர் 
பச்சைமிளகாய்- 6 
காரப்பொடி- 1 டீஸ்பூன் 
கரம்மசாலாப்பொடி- 1 டீஸ்பூன் 
சீரகம்- 1 டீஸ்பூன் 
ஓமம்- 1/4 டீஸ்பூன் 
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய்- 2 ஸ்பூன் 

செய்முறை... • வெந்தயக்கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் கோதுமை, வெந்தயக்கீரை, தேவையான அளவு உப்பு, சீரகம், பச்சைமிளகாய், கரம்மசாலப்பொடி, காரப்பொடி, ஓமம் ஆகியனவற்றை போட்டு கலந்து அதில் சுடு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். 

• அரை மணி நேரம் பிசைந்த மாவைத் தனியே ஊற வைக்கவும். 

• உருண்டைகளாக இட்டு வட்டமாகத் தேய்த்து சப்பாத்திக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு எடுக்கவும். சப்பாத்தி சிவந்தவுடன் இரு புறமும் மாற்றி மாற்றிப் போட்டு சிவக்க எடுக்கவும். 

குறிப்பு.... 

• வெந்தயக்கீரைச் சப்பாத்திக்குச் சிறந்த இணை பாசிப்பருப்பு தால். 

• வெந்தயக்கீரைக்குச் சொன்ன முறையில் கீரையையும் கீரைச்சப்பாத்திகளாகச் செய்து பார்க்கலாம்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

<>பிரண்டை சப்பாத்தி<>


பிரண்டை சப்பாத்தி

என்னென்ன தேவை?
நார், கணு நீக்கி, 
நறுக்கிய பிரண்டை - 1 கைப்பிடி, 
கோதுமை மாவு - அரை கிலோ, 
நெய் - 1 டீஸ்பூன், 
பச்சை வாழைப்பழம் - பாதி, 
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.  பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

<> முருங்கைக்கீரை அடை <>


முருங்கைக்கீரை அடை

துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு,
பயத்தம் பருப்பு - தலா அரை கப்,
பச்சரிசி - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 4,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - 1 கப்,
துருவிய தேங்காய் (விருப்பப்
பட்டால்) - சிறிது.அரிசி, பருப்பு வகையறாக்களை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். இதை சில மணி நேரம் பொங்க விடவும். பிறகு தோசைக்கல் காய்ந்ததும், தோசை போல வார்த்து, மேலே முருங்கைக் கீரையைத் தூவி, இரண்டு பக்கங்களும் திருப்பிப் போட்டு நன்கு வேக விட்டுப் பொன்னிறமானதும் பரிமாறவும்.

முருங்கைக்கீரையை வதக்கிச் சேர்க்கத் தேவையில்லை. இன்ஃபெக்ஷன் வராமலிருக்க முருங்கைக்கீரை அடை 

<> வெந்தயக்கீரை அடை! <>


வெந்தயக்கீரை அடை!

தேவையானவை:

வெந்தயக்கீரை - 2 க‌ட்டு.
கடலை பருப்பு - 1 க‌ப்.
பச்சரிசி - ஒரு கை‌ப்‌பிடி.
காய்ந்த மிளகாய் - 5.
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி.
இஞ்சி து‌ண்டு - சிறிது.
பெருங்காயம் - 1 ‌சி‌ட்டிகை.
எண்ணெய், உ‌ப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கடலை பருப்பு, பச்சரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவை‌த்து அதனுட‌ன் கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், உ‌ப்பு வை‌த்து கொர கொரப்பாக, கெ‌ட்டியாக ஆ‌ட்டி எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வெந்தயக் கீரையைக் காம்புகள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும்.

மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேருங்கள். பெருங்காயத்தையும் மாவில் சேர்த்துவிடுங்கள்.

தோசைக்கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக த‌ட்டி‌ப் போ‌ட்டு சு‌ற்‌றிலு‌ம் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு ‌சிவ‌ந்தது‌ம் எடு‌த்து‌ப் ப‌ரிமாறு‌ங்க‌ள். 

கீரையின் மகத்துவம்:-

பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். 

உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். 

நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். 

வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

கொள்ளு கார அடை


கொள்ளினை வைத்து செய்த அடை இது. மிகவும் சுவையாக காரசாரமாக இந்த அடை இருக்கும். காலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 - 5 மணி நேரம்

தேவையான பொருட்கள் :
· கொள்ளு - 2 கப்
· அரிசி - 1/4 கப்
· காய்ந்த மிளகாய் - 5
· உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளித்து சேர்க்க வேண்டியவை :
· எண்ணெய் - 1 தே.கரண்டி
· கடுகு - 1/4 தே.கரண்டி
· சீரகம் - 1/4 தே.கரண்டி
· சோம்பு - 1/4 தே.கரண்டி
· உடைத்த உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
· வெங்காயம் - 1/2 பொடியாக நறுக்கியது
· இஞ்சி - பொடியாக நறுக்கியது சிறிய துண்டு
· பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
* கொள்ளு + அரிசியினை சேர்த்து 4 - 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
* ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு + தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.
* தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.
* ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடையினை திருப்பி போட்டு வேகவிடவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.
இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


கொள்ளினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொள்ளினை தினமும் உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்து கொண்டால் நிச்சயம் எடை குறையும்.

கொள்ளு அதிக சூட்டினை எற்படுத்தும் என்பதால் கொள்ளினை சாப்பிடும் சமயம், மோர், தண்ணீர் போன்றவையினை அதிகம் குடிப்பது மிக நல்லது.

<> புதினா சூப் <>


புதினா சூப்

புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.  அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும்.  சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது.

புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும்.  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

<> முருங்கைகீரை சூப் <>


முருங்கைகீரை சூப் 

செய்யும் முறை:

முருங்கைகீரை – 2 கப்
வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்

<> வாழைத்தண்டு சூப் <>


வாழைத்தண்டு சூப்

தேவையானவை: 

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்  
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப் 
மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் 
சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: -

• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். 

• அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 

மருத்துவப் பயன்கள் :-

• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

மருத்துவப் பயன்கள் : -

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.

வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது.

இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

<> பீட்ரூட் சூப் <>


பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்: -
பீட்ரூட்: அரை கிலோ
வெங்காயம்: 1
எண்ணெய்: 3 மேஜைக் கரண்டி
உருளைக்கிழங்கு: 1
துருவிய எலுமிச்சம் பழத்தோல்: அரைக் கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு: 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள்: தேவைக்கேற்ப 

செய்முறை:-

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாற வேண்டும்.

பீட்ரூட் மருத்துவ பயன்கள் : -

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

ஆகவே இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, குடலியக்கமும் நன்கு இயங்கும்.

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. 

கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும். பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். 

குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். 

கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

<> தக்காளி சூப் <>


தக்காளி சூப்
தேவையான பொருள்கள்:
தக்காளி = 5
வெங்காயம் = 1
மிளகுத்தூள் = தேவையான அளவு
பூண்டு = 6 பல்
வெண்ணெய் = 2 தேக்கரண்டி
சோள மாவு = 1 தேக்கரண்டி
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = தேவையான அளவு
செய்முறை: -
தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

மருத்துவ குணங்கள்: -
தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை கொடுக்கும் லைகொபேன் என்னும் இயற்கை நிறமி தான் நம் சருமம் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. 

லைகொபேன் சமைத்த தக்காளியிலும், கெச்சப், சூப், ஜூஸ் ஆகிய தக்காளியை வைத்து செய்யப்படும் பொருட்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது.

சருமத்தில் சுருக்கம் விழுவதை குறைக்கிறது;
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூப் உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வைத்து குடித்தால் உடல் வலிமையுடன் பலம் பெறும். 
இந்த தக்காளி சூப் விரைவாக ஜீரணமாக கூடியது.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்  ஃபாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபாஸ்ப்போரிக் அமிலம் ஆகியவை தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. 

தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவை உள்ளன. மேலும் வைட்டமின் C, வைட்டமின் B மற்றும் வைட்டமின்  D ஆகியவை காணப்படுகிறது.

இதனால் உடல் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கும். 

எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலத்தை தரும். இதய  சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம். 

கபம், சளியை வெளியேற்றும். மலச்சிக்கலை குறைத்து ஜீரண சக்தியை அளிக்கும்.
வெங்காயத்தில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது கூறுகள் அதிகம் உள்ளது. இதனால் ஜலதோச‌ம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமல் போன்ற நோய்கள் குறைகிறது.
சரும வல்லுநர் ப்ரொபசர் திரு பிர்ச்-மாசின் கூறுகிறார்: “தக்காளி சாப்பிடுவதால் கூடுதலான சருமப் பாதுகாப்பு கிடைக்கிறது”. தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி என் ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டி என் ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது. தக்காளியின் இந்தப் பாதுகாப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.

<> பரங்கிக்காய் சூப் <>


பரங்கிக்காய் சூப்


தேவையானவை:

பரங்கிக்காய் - ஒரு துண்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பால் - அரை கப்  
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு  
பூண்டு - 2 பல்  
எண்ணெய் - 2 டீஸ்பூன்  
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

• பரங்கிக்காயின் தோலை சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

• வெங்காயம் பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.

• குக்கரில் எண்ணெய் விட்டு, பூண்டு, தக்காளி, வெங்காயம், பரங்கிக்காயை சேர்த்து வதக்கவும்.

• 10 நிமிடம் வதங்கியதும் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கவும்.

• ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்த சூப்பை மீண்டும் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி, பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

பரங்கிக்காயின்  மருத்துவக் குணங்கள்: -
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

<>பேரிச்சம் பழ சூப் <>


பேரிச்சம் பழ சூப்

தேவையான பொருள்கள்: 

பேரிச்சம் பழம்  - 5 
வெள்ளரிக்காய்  - 1 
கேரட்         - 2 
தேங்காய்       - 2 
கீற்று புதினா இலை    - 5 
மிளகு          - 2 
பச்சை மிளகாய்   -1 
மல்லி இலை     - சிறிது 

செய்முறை: 

* மல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நன்கு கழுவி நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.

பேரீச்சம் பழத்தின் நன்மைகள் :-
இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தைச் விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
* காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது
* வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச்சத்துக்களும் தாதுப்பொருட்களும் உள்ளது.
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம்இ உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு வயிறுஇ குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும். ஆண்மை சக்தியையும் பெண்மை சக்தியையும் பெருக்கிடும்.

பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.

பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம். பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவேஇ அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.

<>பாகற்காய் சூப் <>


பாகற்காய் சூப்

தேவையான பொருட்கள்... 

பெரிய பாகற்காய் - 1 
எலுமிச்சம்பழம் - பாதி 
காய்ச்சிய பால் - 1/2 கப் 
எண்ணெய்‍ - 1 தேக்க‌ர‌ண்டி 
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பச்சை மிளகாய் - 1 
மிளகு தூள் - 1 ஸ்பூன் 

தாளிக்க...

சோம்பு - 1/4 தேக்க‌ர‌ண்டி 
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்க‌ர‌ண்டி 
பட்டை - 1 
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை.... 

• பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும். 

• வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும். 

• அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். 

• கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.

பாகற்காயின் பயன்கள்:-
விஷ சுரம் நின்று விடும்.
நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது
வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும்
சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்னை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

<>இஞ்சி சூப் <>


சத்தான... இஞ்சி சூப்

தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:-
இஞ்சி விழுது - 5 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி விழுதை போட்டு, நன்கு 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதோடு தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சத்தான இஞ்சி சூப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.


இஞ்ஜியின் பயன்கள்:-

வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் இஞ்சி ஒரு நல்ல நிவாரணி. வயிற்றுவலி, வாந்தி, பித்தம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் இஞ்சி நிவர்த்தி செய்யும். சாப்பிட்ட பின்பு சிறிது இஞ்சியைச் சாப்பிட உமிழ்நீரின் அளவை அதிகப்படுத்தி வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.
பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மசக்கையினால் ஏற்படும் வாந்தி, மஞ்சட்காமாலை, மூலம், மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சரி செய்யும்.
இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இஞ்சிச் சாறும் தேனும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சளியில் இருந்து விடுபடும் வரை சாப்பிட வேண்டும். இஞ்சியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடிகட்டி சிறிது சர்க்கரையுடன் சூடாக பருக மூக்கில் நீர் வடியும் பிரச்சினை சரியாகும். சளியினால் ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்துகளுடன் இஞ்சி டீ சாப்பிட மனதிற்குப் புத்துணர்வு கிடைக்கும்.

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கஷாயத்துடன் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும் சிறிது தேனும் கலந்து பருக நுரையீரல் போன்றவற்றில் அடைத்துக் கொண்டிருக்கும் சளி தானாகவே வெளியேறிவிடும். வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஷாயத்தைக் கொடுக்கக் கூடாது. சளியினால் தலைவலி ஏற்பட்டால் சுக்கை சிறிது நீர் விட்டு உறைத்து வலி இருக்கும் இடங்களில் லேசாகத் தடவவேண்டும்.

அரை ஸ்பூன் இஞ்சிச் சாற்றை அரை வேக்காடு முட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து தினம் ஒரு முறை இரண்டு மாதங்கள் சாப்பிட உணர்வு நரம்புகளைப் புதுப்பித்து ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்குவதுடன் உடலிற்கு புதுப்பலத்தையும் அளிக்கும்.

<>உடலுக்கு வலிவு தரும் சூப்கள் <>


வெந்தயக் கீரை சூப் 
சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் சூப் இது!

தேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சோள மாவு - ஒரு டீஸ்பூன்,  பூண்டு - 2 பல், வெண்ணெய் - சிறிதளவு, காய்ச்சிய பால் - அரை டம்ளர், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: -
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து,  கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும். காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

இந்த 'வெந்தயக் கீரை சூப்’ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல... கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் 'வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.
... வெந்தயக் கீரை சூப்: சிறிதளவு சோளத்தை (ஃப்ரெஷ் கார்ன்) அரைத்து சேர்த்தால்... மணமும், ருசியும் கூடும்.

இந்த சூப்பின் நன்மைகள்:-

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும்!
சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும்.
வாயுக்கோளாறு, வயிற்று உப்புசம், வயிற்றுப் 
போக்கை நிறுத்தவும் உதவும்
உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் உண்டு.
குடற் புண்ணை ஆற்றும் வல்லமை உண்டு.

<>வளமான வாழ்விற்கு-உணவே மருந்து!<>

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 
அருந்தியது அற்றது போற்றி உணின்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். வயிறு பசி ஆற மட்டும் உண்டால் போதும் என்ற கணக்கெல்லாம் செய்து கொள்ளாமல், நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வாழ்கிறோம் என்று எண்ணினால், நோய் நொடியற்ற வாழ்க்கை வாழலாம். நல்ல உணவு முறையைப் பின்பற்றினால், தோல் நோய், கறுத்த சருமம், சொறி, அரிப்பு, உலர் சருமம் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கலாம்.

இப்போது எதற்கெல்லாமோ ‘ரெடிமேட்’ வந்துவிட்டது. குழந்தைகளின் ‘பிரேக்ஃபாஸ்ட்’ என்ற பெயரில் ரெடிமேட் வகையறாக்கள், குழம்பு பேஸ்ட், புளியோதரை மிக்ஸ், ரெடிமேட் இட்லி, தோசை, உப்புமா மற்றும் இனிப்பு வகையறாக்கள், அவ்வளவு ஏன் புளியோதரை, எலுமிச்சை, வத்தக்குழம்புகூட ரெடிமேட் பேக்கில் விற்கப்படுகிறது. இவற்றைப் பதப்படுத்த ரசாயனம் கலக்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வெறும் ரெடிமேட் உணவு வகைகளையே சாப்பிட்டு உடலை வளர்த்தால் உடல் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க என்ன முயற்சி செய்தாலும் முடியாது. அளவுக்கதிகமான தானியங்கள், பால்பொருட்கள் ஆகியவற்றை உண்டால் உடல் என்னாவது? பழங்களையும் காய்கறிகளையும் முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக சேர்க்காமல் ஒதுக்கினால், அதைவிட தீங்கு வேறு ஏதும் இல்லை என்பதோடு உடலுக்கு அத்தியாவசிய தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடும்.

பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் அளவான தானிய வகைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகள், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மகப்பேறு பாதுகாப்பு, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வது போன்ற பல ஆரோக்கியமான வழிவகைகளைப் பெறமுடியும்.

நீங்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றினால் போதும்.

தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் மிக மிக அவசியம். வைட்டமின் ஏ நிறைந்த பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை, புளி, மோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பார், ரசம் போன்றவற்றில் இவற்றைச் சேர்ப்பதாலும் அல்லது கூட்டு, பொரியல் செய்தோ சாப்பிடுவது சிறந்து பலனை அளிக்கும்.

அதேபோல், தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். முளைக்கீரை, அரைக்கீரை பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை ஆகியவற்றில் கூட்டோ, பொரியலோ செய்து சாப்பிடலாம் அதுபோன்றே தினமும் அருகம்புல் ஜூஸ், தேன் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை கிடைக்காத பட்சத்தில் கறிவேப்பிலை கொத்தமல்லி, புதினா துவையல் செய்து சாப்பிடலாம். மதிய நேரங்களில் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, வேக வைத்த பயிறு வகைகள், சோயா பால் மிகவும் உகந்ததாகும்.

இரவு நேரங்களில் படுக்கப்போவதற்கு அரை மணி முன்பாக ஒரு டம்ளர் பாலில் பனங்கற்கண்டு, தேன் சேர்த்து சாப்பிடுவது இரவு நல்ல நித்திரையளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். அதுபோன்றே காலை, மாலை என இருவேளை நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசித்து இரத்த ஓட்டத்தை சீராக்கிக் கொள்வதோடு இப்பயிற்சிகளை தினமும் அனுசரிப்பது நமது இதயத்திற்கு மிகவும் பலத்தை அளிக்கும். அன்றாடம் குளிப்பதற்குக்கூட அதிகமாக சோப்பை பயன்படுத்தாமல் கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளித்தல் மற்றும் வாரம் ஒரு தடவை எண்ணெய்க் குளியலும் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகும்.

வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை அணிவதும் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றமானதாகும். இவ்வாறாக, உடலைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கை உணவை நாம் தினமும் பழக்கப்படுத்திக் கொள்வதோடு கூடுமான வரை மனதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் பிரார்த்தனை, தியானம், மனதை ஒருமுகப்படுத் தும் பயிற்சிகள், யோகா போன்றவற்றை அனுச ரிப்பதாலும் மனதில் எப்போதும் குதூகலமும் அமைதியும் ஏற்படும். மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வாழ்வது ஒரு முறைதான் _ வாழ்க்கை வாழ் வதற்கே. அதற்கு உணவே மருந்தாக இறைவன் அளித்துள்ளான். சிறந்த உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.